திருவிழா நேரத்தில் ராசிபுரம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு

ராசிபுரம். நவ.6: ராசிபுரம்  நகராட்சியில், கடந்த ஒரு வாராமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. தற்போது கோயில் திருவிழா நடந்து வருவதால் தண்ணீரின்றி  பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் திருவிழா  நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான பொங்கல் விழா,  அக்னி குண்டம் மற்றும் தேரோட்டம் ஆகியவை இன்றும், நாளையும் நடக்கிறது. இந்நிலையில் ராசிபுரம் நகராட்சி பகுதியில்  கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவிழாவில் பங்கேற்பதற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துள்ள பொதுமக்கள், கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிக்குள்ளாகியுள்ளனர். நகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து லாரி மற்றும் டிராக்டர் மூலம் நகராட்சி பகுதியில் வார்டு வாரியாக குடிநீர் விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: