உத்தமபாளையம், நவ. 6: பருவநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி உள்ளது. இதனை தடுத்திட எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி முன்னாள் அரசு டாக்டர் விளக்கம் அளித்துள்ளார். உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், அனுமந்தன்பட்டி உள்ளிட்ட ஊர்களை சுற்றிலும் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. சீதோஷ்னநிலையில் திடீரென மாற்றம் உண்டாவதும், பின்பு மழை பெய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் எல்லா ஊர்களிலும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மறுபுறம் பகல் நேரத்தில் வெப்பம் கொளுத்துவதும், பின்பு மழை பெய்வதுமாக தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் மாற்றம் தெரிகிறது. இதனால் கொசுக்கள் பகல், இரவு என எல்லா நேரங்களிலும் கடிக்கிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என கடந்த 1 வாரமாகவே அதிகளவில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி என வருபவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்கவும், மருந்து, மாத்திரைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.