மூணாறு, நவ. 6: மூணாறில் முக்கிய சுற்றுலா தலங்களான பொன்முடி, எக்கோபாயிண்ட், தூக்குப்பாலம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததன் காரணமாக குப்பைகள் மற்றும் கழிவுகள் முக்கிய சாலைகளில் குவிந்து கிடப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இடுக்கி மாவட்டம் மூணாறில் முக்கிய சுற்றுலா தலங்களாக கருதப்படுவது பொன்முடி, மாட்டுப்பட்டி, தூக்குப்பாலம், எக்கோபாயிண்ட் போன்ற பகுதிகள் இந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததன் மூலம் குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் முக்கிய சாலைகளில் குவிய துவங்கியுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் விவசாய தொழில் கடும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் சுற்றுலாத்துறையை மட்டுமே தற்பொழுது இடுக்கி மாவட்டம் நம்பி உள்ளது. இந்நிலையில் முக்கிய சுற்றுலா தளங்களில் குப்பைகளை கொட்டுவதற்கு குறிப்பிட்ட இடங்கள் இல்லாத காரணத்தால் மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் பயன்படுத்திய பாட்டில்கள், குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை முக்கிய சாலைகளில் கொட்டுவதால் சாலைகளில் குப்பைகள் குவிந்த வண்ணம் காணப்படுகிறது.