காரைக்குடி, நவ.6: கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சாலை ஓரங்களில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் நகரில் முன்பை விட கொசு தொல்லை அதிகரித்துள்ளது. கொசுவை கட்டுப்படுத்த மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 140 கிலோ மீட்டருக்கு மேல் கழிவுநீர் கால்வாய்கள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் செல்லும் கால்வாய்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. தவிர தற்போது அவ்வப்போது பெய்யும் மழையால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுத் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீசன் மாற்றம் மற்றும் கொசு கடிப்பதால் குழந்தைகளுக்கு கடுமையான aகாய்ச்சல் பரவி வருகிறது. கழிவுநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் டாஸ்மாக் பார்கள், ரோட்டோர கடைகள், பாஸ்ட் புட் கடைகள் மற்றும் கையேந்தி ஓட்டல் கழிவுகள் அனைத்தும் கால்வாய்களில் கொட்டுவதால் கழிவுநீர் முறையாக செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. தவிர பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உறிஞ்சுகுழிகளை முறையாக மூடாமல் திறந்த படி வைத்துள்ளனர். இதனால் கொசு , ஈ தொல்லை முன்பை விட தற்போது அதிகரித்து உள்ளது.