திருப்பரங்குன்றம் அருகே போலீசில் சிக்கியவர்கள் டூவீலர் திருடியது அம்பலம்

திருப்பரங்குன்றம், நவ. 6: திருப்பரங்குன்றம் அருகே, வெல்டிங் சாமான்களுடன் போலீசில் சிக்கியவர்கள், மதுரை தல்லாகுளம் பகுதியில் டூவீலரை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் தல்லாகுளம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம் அருகே, பாம்பன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஏடிஎம் இயந்திரம் அருகே டூவீலர் மற்றும் காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து போலீசார், காரை சோதனையிட்டனர். அதில், வெல்டிங் செய்ய தேவையான கருவிகள் மற்றும் இரும்புகளை உடைக்க தேவையான ‘கட்டர்’ உள்ளிட்ட உபகரணங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கார் மற்றும் டூவீலரில் வந்தவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெயராமன் (32), நாகராஜ் (31), மனோஜ்குமார் (30), சபரி (35) என்பதும், இவர்கள் தல்லாகுளம் பகுதியில் டூவீலரை திருடி விட்டு, திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஏடிஎம் மற்றும் வீடுகளை கொள்ளையடிக்க வந்ததது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து, விசாரணைக்காக தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: