திருச்சி, நவ.5: சில்லா புனல் மின் திட்டத்தின் புனரமைப்பு, நவீனமயம் மற்றும் மேம்பாட்டுக்கான ஆணையை பெல் நிறுவனம் பெற்றது.சில்லா புனல் மின் திட்டத்தின் நான்கு 36 மெகா வாட் அலகுகளில் சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான புனரமைப்புப் பணிகளுக்கான இந்த ஆணையை உத்தராகண்ட் புனல் மின் நிறுவனத்திடமிருந்து பிஹெச்இஎல் பெற்றுள்ளது. உத்தராகண்ட்டின் பௌரி கர்வால் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தில் உள்ள 36 மெவா அலகுகள் நான்கும் தலா 39 மெவா திறனுள்ளவையாக மேம்படுத்தப்படும்.கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்த அலகுகளின் புனரமைப்பு பணிகள் முடிவடைகையில் அவற்றின் திறன், மின்னுற்பத்தி மற்றும் செயல்திறன் மேம்படுவதுடன், அலகின் கிடைக்கும் தன்மை மற்றும் ஆயுளும் கூடும். மின்துறையில் வளங்களுக்கான தட்டுப்பாடு நிலவும் தற்போதைய சூழலில், பழைய புனல்மின் திட்டங்களின் புனரமைப்பு, புதிய திட்டங்கள் அமைப்பதுடன் ஒப்பிடுகையில், சிக்கனமானதும், குறைவான நேரம் எடுப்பதாகவும் இருப்பதால் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது.