முத்துப்பேட்டை, நவ.6:
துறைக்காடு கடல் மீனவர் கூட்டுறவு சங்கம் உட்பட மீனவர் கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் பரவலாக முத்துப்பேட்டை பகுதியில் நடந்து வருவதால் அதிலும் முறைகேடு நடந்து வருவதாகவும் இதில் மீனவர்கள் அல்லாதவர்கள் மீனவர்கள் என்று சேர்க்கப்படுவதாக குற்றச்சாட்டு மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் துறைக்காடு பகுதியை சேர்ந்த மீனவர் நிஜாம் மைதீன் என்பவர் சமீபத்தில் தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மீன்வளத்துறையினரிடம் வாங்கிய தகவலில் கஜா புயல் நிவாரணத்தில் பல குளறுபடிகள், மீனவர்கள் அல்லாதவர்களுக்கு நிவாரணம், இறந்தவர்கள் பெயரில் நிவாரணம் என பல மோசடி நடந்தது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிஜாம் மைதீன் தலைமையிலான மீனவர்கள் பல்வேறு அதிகாரிகளுக்கு புகார்மனுக்கள் அனுப்பியுள்ளனர்.