கும்பகோணம், நவ. 6: கும்பகோணம் உப்புகாரத்தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் அடைப்பால் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர்.கும்பகோணம் உப்புகாரத்தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகம், பெட்ரோல் பங்க், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், பள்ளிகூடங்கள் உள்ளன. உப்புக்கார தெரு சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். கடந்த சில நாட்களாக உப்புகாரத்தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் அடைத்து கொண்டதால் கழிவுநீர் கொப்பளித்து வெளியேறி சாலையில் ஓடுகின்றன.தற்போது மேன்ஹோல் முழுவதும் அடைத்து கொண்டதால் கடந்த 2 நாட்களாக உப்புகாரத்தெரு முழுவதும் ஆறாக கழிவுநீர் ஓடுகிறது. இந்த கழிவுநீர் வீடுகளுக்கு முன்புறமும், வணிக நிறுவனங்களுக்கு முன்புறமும் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் தான் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.