புதுக்கோட்டை, நவ. 6: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) பழனியப்பா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரதப் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இயற்கை இடர்பாடுகளான புயல், பெருவெள்ளம், வறட்சி, பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்படும் தருணங்களில் மகசூல் இழப்புக்கு ஏற்றவாறு பயிர் இழப்பீட்டு தொகை பயிர் காப்பீட்டு நிறுவனமான அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட்டால் வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு உண்டான காப்பீட்டு தொகையான ரூ. 29000 ல் விவசாயிகள் செலுத்த வேண்டிய 3சதவீத பிரிமிய தொகை ரூ.870 - ல், 1.5 சதவீத பிரிமிய தொகை ரூ. 435 செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள 1.5 சதவீத பிரிமிய தொகை ரூ. 435 யை மத்திய மாநில அரசுகளால் சரிபாதியாக பிரித்து செலுத்தப்படும்.