காவேரிப்பாக்கம் அருகே வீட்டின் சுற்றுச்சுவர் மீது தண்ணீர் ஊற்றிய தகராறில் இருவர் கைது

காவேரிப்பாக்கம், நவ.6: காவேரிப்பாக்கம் அருகே துணி துவைத்த கழுவுநீரை வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஊற்றியதால் ஏற்பட்ட தகராறில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகறும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்26), கூலிதொழிலாளி. அதேபகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(32). இருவரின் வீடுகளும் ஒரே தெருவில் அடுத்தடுத்து அமைந்துள்ளது. இந்நிலையில், மணிகண்டனின் மனைவி ரஞ்சனா நேற்று துணி துவைத்த தண்ணீரை அருகே உள்ள ஐயப்பனின் வீட்டு சுவர் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனை  ஐயப்பனின் தந்தை செல்வம், தாய் நிர்மலா, தங்கை கவிதா ஆகியோர் ரஞ்சனாவிடம் தட்டிகேட்டனர். அப்போது ரஞ்சனா மற்றும் ஐயப்பனின் குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சனா, மணிகண்டன் மற்றும் அவரது உறவினர் பாலாஜி(45) ஆகியோர் ஐயப்பனின் குடும்பத்தினரை கைகளால் சரமாரியாக தாக்கினர். இதனைக் கண்ட பொதுமக்கள் படுகாயமடைந்த ஐயப்பனின் குடும்பத்தினரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து ஐயப்பனின் தந்தை செல்வம் நேற்று காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், எஸ்ஐ பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டன் மற்றும் அவரது உறவினர் பாலாஜி(45) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: