கும்மிடிப்பூண்டி, நவ. 6: பொன்னேரி தாலுகா கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சுமன். பொன்னேரியை சேர்ந்தவர் லோகநாதன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட் நோக்கி வந்தனர். அப்போது மர்ம ஆசாமிகள் மடக்கி தங்களுடைய செல்போன்களை கொள்ளையடித்து சென்று விட்டதாக கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் சில தினங்களுக்கு முன்பு சந்தேகத்தின் பேரில் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (25), விஜய்(21), விக்னேஷ் (25) ஆகிய 3 பேரை கும்மிடிப்பூண்டி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் பிரவீன் குமாருடைய மனைவி ஷாலினி, தன்னுடைய கணவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்மிடிப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.