நாமக்கல், நவ.5: நாமக்கல் மாவட்டத்தில் பொருளாதார கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் முழுமையான விவரங்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்ட புள்ளியியல் துறையின் மூலம், மின்னணு தொழில்நுட்ப முறையில், மொபைல் ஆப் மூலம் 7வது பொருளாதாரக் கணக்கெடுப்பு பணி மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது. இந்த பணியை கலெக்டர் மெகராஜ் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது: பேப்பர், பேனா எதுவும் இல்லாமல், முழுவதும் மொபைல் ஆப் மூலம் பொது சேவை மைய பணியாளர்களால் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதில், வேளாண் பயிர் உற்பத்தி தவிர மற்ற இதர பொருள்கள் உற்பத்தி, மின்சாரம், எரிவாயு, கட்டுமானம், வணிகம் மற்றும் சேவை போன்ற நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றது. பாதுகாப்பு நிறுவனங்கள், ராணுவ அமைப்புகள், பன்னாட்டு அமைப்புகள், வெளிநாட்டவரை மட்டுமே உறுப்பினராக கொண்ட குடும்பங்கள், தொடர்ச்சியாக இடம்பெயரும் மக்கள் ஆகியோரின் விவரங்கள் கணக்கெடுப்பில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.