பவானி, நவ.5: பவானி வேளாண் வட்டாரத்தில் 75 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழுவின் தாக்குதலைத் தடுக்கும் வகையில் இலவசமாக மருந்து தெளிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பவானி, கல்வாநாயக்கனூர், மைலம்பாடி, போத்தநாயக்கனூர், கொம்புக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளப் பயிர்களைச் சாகுபடி செய்துள்ளனர். இப்பயிர்களில் படைப்புழு தாக்கினால் மகசூல் முற்றிலும் பாதிக்கப்படுவதோடு, பயிர்களின் குருத்து பாதிக்கப்பட்டு சேதமடையும். கடந்த ஆண்டு பரவலாக படைப்புழு தாக்குதல் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது முன்னெச்சரிக்கையாக மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை திட்டத்தின்கீழ் 20 நாட்களுக்குட்பட்ட பயிர்களுக்கு ஒருமுறையும், 45 நாட்களுக்குட்பட்ட பயிர்களுக்கு மற்றொரு முறையும் தெளிக்க விவசாயிகளுக்கு ரூ.4500 மதிப்பிலான மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது.