சீர்காழி, நவ.5: சீர்காழி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் வருவதால் சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர் திணறி வருகின்றனர். சீர்காழியில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து 1500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதேபோல் 200க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் விஷக்காய்ச்சல் போன்ற பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவமனைக்கு அதிகளவில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சில நோயாளிகள் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைக்கு காலையில் நோயாளிகள் அதிகளவில் வரும்போது மருத்துவர்கள் அதிகளவில் இருந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் மதியம் இரவு நேரங்களில் காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர் மட்டுமே இருந்து வருகிறார். அவரால் குறைவாக சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகிறார். இதனால் நோயால் பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.