வேலூர், நவ.5:உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் விவரங்கள் கனிணியில் பதிவேற்றம் செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணி விரைவில் நடக்க உள்ளது. அதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான பணிகள் நடந்து முடிந்துள்ளது.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து அனுப்பும்படி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தற்போது அனைத்து மாவட்டங்களில் ஒவ்வொரு துறை வாரியாக பட்டியல் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இதற்காக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் அனைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர்.இதுகுறித்து உள்ளாட்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபட எவ்வளவு ஊழியர்கள் தேவைப்படுவார்கள். அதற்கான ஊழியர்களின் விவரங்கள் துறைவாரியாக அனுப்ப வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.