காரைக்குடி, நவ. 1: காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி சங்குசமுத்திர கண்மாய் குடிமாரத்து பணியால் மயானத்துக்கு செல்லும் பாதை பள்ளமாகி மாறி இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. மயான பாதை கேட்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி சங்குசமுத்திர கண்மாய் 120 ஏக்கருக்கு மேல் பரப்பளவு உள்ளது. இக் கண்மாய் குடிமராமத்து பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இரண்டு ஒப்பந்தகாரர்கள் இப்பணிகளை பிரித்து பார்த்து வருகின்றனர். நான்கு வழிச்சாலை அருகே உள்ள பகுதியில் பணிகள் ஓரளவு முடிந்துள்ளது.
இந்நிலையில் ஓ.சிறுவயல் செல்லும் சாலையில் உள்ள கண்மாய் பகுதிகள் குடிமாரத்து பணி மேற்கொள்ள நேற்று முன்தினம் துவங்கினர். குடிமாரத்து பணி மேற்கொள்ள இடத்தின் அருகே வேடன் நகர் (நரிக்குறவர்களின் குடியிருப்பு) பகுதி வருவதால் அப்பகுதி மக்கள் பணி துவங்க விடாமல் குழிக்குள் படுத்து ஆர்பாட்டம் செய்தனர். இதனை தொடர்ந்து பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் என்ஜிஜிஓ காலனி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களுக்காக ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மயானத்துக்கு செல்லும் பாதை முழுவதும் குடிமாரத்து என்ற பெயரில் பள்ளமாக மாற்றி உள்ளனர்.
இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனவ். நேற்று அப்பகுதியில் இறந்தவரின் உடலை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பணியை நிறுத்தக்கோரி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் பாலாஜி பேச்சுவார்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘குடிமாரத்து என்ற பெயரில் மண் கொள்ளை நடக்கிறது. கரையை பலப்படுத்துகிறோம் என கூறுகின்றனர். ஆனால் இதுவரை கரை அமைக்க வில்லை. வெளிமார்க்கெட்டில் ஒரு லோடு மண் ரூ.5000 வரை விற்பனை செய்கின்றனர். அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இந்நிலையில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பாதையை மறைத்து பள்ளம் வெட்டி உள்ளனர்’ என்றனர்.