மதுரை, அக்.31: தொடர் மழை காரணமாக மதுரையில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. அரசு மருத்துவமனையில் மட்டும் 19 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையில் உள்ளனர். நகரில் 500க்கும் மேற்பட்டோர், வைரஸ் உள்ளிட்ட மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் கடந்த இரு தினங்களாக மர்மக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மதுரை நகரில் 500க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். புறநகர் பகுதிகளில், இந்த எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்டதாக கூறப்படுகிறது. மழை காரணமாக, ெகாசு உற்பத்தி அதிகரித்து, காய்ச்சல் பரவி வரும் நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை, அரசு மருத்துவமனையில் 19 பேரும், தனியார் மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்டோரும், அதற்கான தனி வார்டில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.