திருமங்கலம், அக்.31: திருமங்கலத்தில் பெய்த மழையால் பல ஆண்டுகளுக்கு பின்பு வடகரை கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணிமுதல் மதியம் வரையில் தொடர்ந்து மழை பெய்தது. மழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி பெருக்கெடுத்தது. திருமங்கலத்தில் கழிவுநீர் வாறுகாலாக ஓடிய வடகரைகால்வாயில் பல ஆண்டுகளுக்கு பின்பு நேற்று மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வடகரை கால்வாயில் சமீபத்தில் மதகு மற்றும் ஷெட்டர்கள் பொதுப்பணித்துறையினரால் பழுதுபார்க்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஆஞ்சநேயர் கோயில் அருகே புதிதாக அமைக்கப்பட்ட ஷெட்டர் உயரம் குறைவாக இருந்ததால் குண்டாறுக்கு பிரியும் கால்வாயில் ஷெட்டரை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.