திருக்கழுக்குன்றம், அக். 31: திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் பகுதகிளில் தொடர் மழை பெய்து வருவதால், வீடுகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருக்கழுக்குன்றம் - கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதையொட்டி புதுப்பட்டினம் ஊராட்சி ராஜா நகர், பாரத் நகர் உள்பட பல பகுதிகளில் கால்வாய் வசதி இல்லாததால், மழைநீர் இந்த பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி தேங்கி நிற்கிறது. அதேப்போல் ராஜா நகர், பாரத் நகர் அருகில் உள்ள ஒரு பொதுப்பணித் துறை ஏரியின் கரையை முறையாக பலப்படுத்தாததால், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில் அதன் கரையில் மண்சரிவு ஏற்பட்டு, ஏரியில் தண்ணீர் நிற்க முடியாமல் வெளியேறுகிறது. இதனால், அதிகப்படியான நீர் இப்பகுதிகளில் சூழ்ந்து வருகிறது.