நாகர்கோவில், அக்.25: எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நினைவு தினம் அவர்கள் படித்த பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. எல்லை பாதுகாப்பு படை பணியின் போது தீவிரவாத போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவு தினம் வருடந்தோறும் அக்டோபர் 21ம் தேதி மத்திய அமைச்சக எல்லை பாதுகாப்புப்படை தலைமையகம் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தை சார்ந்த ஜோதிபாசு, சுசீலன், ராஜா, கதிரேசன், அபிலாஷ், கண்ணன், ஜான் கென்னடி, ஸ்டான்லி, சட்டநாத பிள்ளை, ஹென்றி ஜோசப் ஆகிய வீரர்கள் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்கள். அவர்கள் படித்த அந்தந்த பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில், நினைவு அஞ்சலி செலுத்தி, நினைவு தின நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாணவ மாணவியர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.