சீர்காழி அருகே பூம்புகாரில் தீபாவளி பொருட்கள் வாங்க சென்றவர் வீட்டில் கொள்ளை

சீர்காழி, அக்.25:சீர்காழி அருகே தீபாவளி பொருட்கள் வாங்க சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.70 லட்சம் மற்றும் 15 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சீர்காழி அருகே பூம்புகார் கீழத் தெருவை சேர்ந்த பழனி என்பவரது மனைவி கலையரசி (50). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 22ம் தேதி கலையரசி தனது மகன்கள் முருகன் (20), அபினேஷ் (16), மகள் அபர்ணா (18) ஆகியோருடன் தீபாவளி பண்டிகைக்கு துணி எடுக்க நாகப்பட்டினம் சென்றனர். பின்னர் துணிகள் எடுத்து விட்டு வரும்போது சந்திரபாடியில் வசிக்கும் தனது தந்தை மடத்தையன் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் (23ம்தேதி) கலையரசி தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1.70 லட்சம் பணம், 15 பவுன் நகை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கலையரசி பூம்புகார் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: