கும்பகோணம், அக். 24: படிப்புக்கு தகுந்தவாறு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி வழங்க வேண்டுமென கும்பகோணத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கும்பகோணம் ஆர்டிஓ அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. ஆர்டிஓ வீராச்சாமி தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் சங்க திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் சரவணன் பேசுகையில், ரயில் மற்றும் பஸ்களில் பயணம் செய்யவும், உதவியாளர்களை அழைத்து செல்லவும் இலவச பயண அட்டை வழங்க வேண்டும். பஸ்சுகளில் இறங்கி ஏறுவதற்கு கண்டக்டர்கள் ஒத்துழைப்பு தராததால் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து புகாரளித்தால் போக்குவரத்து நிர்வாகம் மதிப்பதில்லை.
மாற்றுத்திறனாளிகள் சான்று வாங்க விஏஓ அலுவலகத்துக்கு சென்றால் எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகளை அலட்சியப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார்கள். மேலும் சிலர் எங்களிடம் பணத்தை கேட்டு பெற்று கொள்கிறார்கள். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகளை வழங்குவதுபோல் அந்தந்த கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருந்து, மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.