புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா

ஈரோடு, அக்.24:நீர்நிலைகள், சாலையோரம் தவிர அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது. இது குறித்து ஈரோடு கோட்டாட்சியர் முருகேசன் கூறியதாவது:நீர்நிலைகள் மற்றும் தேசிய, மாநில நெடுங்சாலைகளுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்களை தவிர மற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் பட்டா இல்லாமல் வசித்து வருபவர்கள் பட்டா கேட்டு விண்ணப்பித்தால் அவற்றை பரிசீலனை செய்து தகுதி வாய்ந்தவர்களுக்கு பட்டா வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. நீர் நிலைகள், நீர்வழித்தடங்கள் மற்றும் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களில் வசிப்பவர்களுக்கு எக்காரணம் கொண்டும் பட்டா வழங்கப்பட மாட்டாது. எனவே, ஈரோடு வருவாய் கோட்டத்திற்குட்பட்ட ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு முருகேசன் கூறினார்.

Related Stories: