மன்னார்குடி, அக்.24: கூப்பாச்சிக்கோட்டை கொண்ணையடி ஏரியில் பாசன மதகு பழுது செய்யப் பட்டு 3 மாதங்கள் ஆகியும் ஷெட்டர் அமைக்கதால் தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூப்பாசிக்கோட்டை கிராமத்தில் கொண்ணையடி ஏரி உள்ளது. சுமார் 500க்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் சுமார் 750 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் சாகுபடி வசதி பெறுகிறது. இந்த ஏரியில் உள்ள சின்ன மதகு பாசன வாய்க்காலில் உள்ள முகப்பு பாலம் சேதமடைந்த நிலையில் இருந்ததால் அதனை சீரமைத்து தண்ணீரை தேக்கும் ஷெட்டர் (தண்ணீரை தேக்கும் இரும்பு கதவு) அமைக்க பொதுப்பணித்துறை மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு வேலைகள் நடைபெற்று வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பே சின்ன மதகு பாலம் அமைக்கும் பணி முடிந்த நிலையில் இதுவரை தண்ணீரை தேக்கி வைக்கும் ஷெட்டர் அமைக்கப்படவில்லை. மேலும் ஏரியின் கரை சீரமைக்கும்போது ஏற்கனவே கஜாபுயலின் போதும் ஏரியில் விழுந்து கிடக்கும் மரங்களும் அகற்றபடவில்லை. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏரியில் படித்துறை அமைக்கப்படமாலும் இருக்கிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை பலனில்லை என அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.