தேனி, அக். 23: தேனி மாவட்டத்தில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களை பெரும்பாலான வீடுகளில் உள்ளே நுழைய விடாமல் தடுக்கின்றனர். இதனால் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகள், 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சிகளில் மக்கள் தொகை கணக்குப்படி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடுகளுக்குள் சென்று சமையலறையில் நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், பிரிட்ஜ் பின்புறம் உள்ள நீர் தேங்கும் இடங்கள், பாத்ரூம்களில் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பக்கெட்டுகளில் கொசுப்புழு உள்ளதா என பார்க்கின்றனர். பெரிய வீடுகளில் தண்ணீர் பிடித்து வைக்கும் தரைமட்ட தொட்டிகளையும் பார்க்கின்றனர். டெங்கு கொசுப்புழுக்கள் இருந்தால் அதற்குள் மருந்து ஊற்றி அதனை அழித்து விடுகின்றனர். அந்த தண்ணீரை கீழே தான் கொட்ட வேண்டும். பயன்படுத்தவே முடியாது.