ராசிபுரம், அக். 23: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள நரசிம்ம தெரு பகுதியை சேர்ந்தவர் சௌண்டம்மாள்(65). இவர் நேற்று மதியம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த இரண்டு வாலிபர்கள், சௌண்டம்மாளை வழிமறித்து, தாங்கள் போலீஸ் எனக்கூறியுள்ளனர். தொடர்ந்து தற்போது பண்டிகை காலம். ஏதற்காக இவ்வளவு நகைகளை அணிந்து செல்கிறீர்கள், இங்கு வழிப்பறி அதிகம் நடப்பதால், உங்களது நகைகளை கழற்றி பையில் வைத்து எடுத்துச் செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதையடுத்து சௌண்டாம்மாள், 7 பவுன் கொண்ட இரண்டு செயின்களை கழற்றி பையில் வைத்து எடுத்துச்சென்றார். சிறிது தூரம் சென்றதும், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில், மீண்டும் அதே வாலிபர்கள் வந்துள்ளனர்.அவர்கள் நகைளை பையில் வைத்து எடுத்துச்செல்வதை காட்டிலும், பேப்பரில் வைத்து கட்டி எடுத்துச்செல்லும்படி தெரிவித்தனர். இதையடுத்து சௌண்டம்மாள், அந்த நகைகளை எடுத்து பேப்பரில் வைத்து பொட்டலம் கட்டியுள்ளார். அப்போது வாலிபர்கள் அந்த பொட்டலத்தை வாங்கி பார்த்துவிட்டு, சௌண்டம்மாளிடம் பொட்டலத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்.