சேந்தமங்கலம், அக்.23: சேந்தமங்கலம் அருகே பேளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார மருத்துவ அலுவலர் வடிவேல் தலைமை தாங்கினார். டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது, அதன் அறிகுறிகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க, வீடுகளின் அருகே மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என பெற்றோர்களுக்கு மாணவர்கள் எடுத்துரைக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட நல கல்வியாளர் சொக்கலிங்கம் , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் பிரதீப் குமார், தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.