நெய்வேலி, அக். 23: நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சியில் உள்ள மேல் வடக்குத்து காலனியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் உயிரிழந்த உறவினர்களை தங்கள் ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈசான ஏரியில் அடக்கம் செய்வது வழக்கம். ஆனால் மக்கள் மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் விளை நிலங்களில் பல ஆண்டு காலமாக உடல்களை சுமந்து சென்றனர். மேலும் இதுகுறித்து ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்து வந்தனர். இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் முதலமைச்சரின் தனி பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர் ஆகியோரிடம் பல வருடங்களாக மனு அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்திற்கு வந்த சட்டமன்ற மதிப்பீட்டு குழுவிடம் கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.