பவானி, அக்.18: பவானி அருகே சாக்கடையில் சாயக்கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பவானி நகர் மற்றும் செங்காடு, காடையம்பட்டி, சேர்வராயன்பாளையம், பெரியமோளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள சாயப்பட்டறைகள் இரவு நேரங்களில் சாக்கடைகள் மூலம் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகளை நேரடியாக வெளியேற்றுவதாக பரவலாக புகார் எழுந்துள்ளது. இக்கழிவுகள் சாக்கடை வழியாக பவானி ஆற்றுக்கு சென்று கலப்பதால் நீராதாரம் மாசடைவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை பண்டார அப்பிச்சி கோயில் எதிரில் உள்ள சாக்கடையில் சாயக்கழிவுநீர் சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடியது.