காரைக்கால், அக்.16: பாரம்பரிய நெல் ரகங்களை விரும்பும் மக்களின் ஆதங்கத்திற்கு ஏற்ப, இயற்கை விவசாயத்தில் விவசாயிகள் தீவிரம் காட்டவேண்டும் என மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.காரைக்கால் மாவட்டம் வரிச்சிக்குடி கிராமத்தில் வசிக்கும், இயற்கை விவசாயி பாஸ்கர் என்பவர், 113 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயிடத் திட்டமிட்டு அதற்கான நாற்றங்காலை தயார் செய்து வருகிறார். காரைக்கால் மாவட்ட பிற விவசாயிகளிடையே இதுகுறித்த தகவல்களை கொண்டு சேர்க்கும் வகையில், காரைக்கால் மாவட்ட வேளாண் துறையின் கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார் ஆலோசனையின்பேரில், வேளாண் துறையின் கீழ் இயங்கும் வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகாமை (ஆத்மா) நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, காரைக்கால் பகுதி விவசாயிகள் பலர், பாஸ்கரின் பாரம்பரிய நெல் ரகங்களை, மாவட்ட வேளாண் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில், மாவட்ட மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, சிறப்பு அழைப்பாளராக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பாஸ்கர் செய்துவரும் பயிர் சாகுபடியைப் பார்வையிட்டு அவரை வெகுவாக பாராட்டினார்.தொடர்ந்து, கடந்த 50 ஆண்டுகளாக ஒட்டடையான் பாரம்பரிய நெல் ரகத்தை பாதுகாத்து வரும் நாகை மாவட்டம், நரசிங்க நத்தத்தை சேர்ந்த விவசாயி ஞானப்பிரகாசம், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டதோடு, விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.