திருச்செங்கோட்டில் தூய்மையே சேவை விழிப்புணர்வு முகாம்

திருச்செங்கோடு, அக்.16: நாமக்கல் மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் சாரண, சாரணீய இயக்கத்தின் சார்பில், தூய்மையே சேவை விழிப்புணர்வு முகாம் கொண்டாடப்பட்டது.திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரும், சாரண இயக்கத்தின் தலைமையிட ஆணையருமான குமார், வித்யா விகாஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் பூரணப்ரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செங்கோடு கல்வி மாவட்ட சாரண இயக்கத்தின் உதவி சாரண ஆணையர் பழனியப்பன் முகாமை துவக்கி வைத்தார்.இந்த முகாமில் வித்யா விகாஸ் பொறியியல் கல்லூரி, கே.எஸ்.ஆர் பாலிடெக்னிக் கல்லூரி, கே.எஸ்.ஆர். தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் ஜே.கே.கே.என் கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த திரிசாரண, சாரணீயர்கள் 100 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் மலைக்கோயிலுக்கு செல்லும் படிப்பாதையில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர். மேலும் பக்தர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டால் உண்டாகும் தீமைகள்  மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பற்றி எடுத்துரைத்தனர்.

முகாமினை சாரண இயக்க செயலர்கள் விஜய்,  ரகோத்தமன், கோவில் செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஆசிரியை கௌசல்யா, ஆசிரியர்கள் ஜெகதீஸ்வரன், கார்த்திக், மணியரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: