கும்மிடிப்பூண்டி, அக். 16: கும்மிடிப்பூண்டி அடுத்த ஓமசமுத்திரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் கடலையொட்டி அமைந்துள்ளதால், இங்கு நிலத்தடிநீர் உப்பு தண்ணீராக உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நத்தம் ஊராட்சியில் இருந்து பைப் லைன் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக ஓமசமுத்திரத்தில் உள்ள 5 தெருக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் உப்பு தண்ணீரை காய்ச்சி குடிக்கின்றனர். இதன்காரணமாக குழந்தைகள், முதியவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் செய்தும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், ஊராட்சி செயலாளரை நியமித்து, அவர் மூலம் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளவும், சுத்தமான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தும் பலனில்லை.