தேவாரம், அக்.15: உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நிதிப்பற்றாக்குறையால் கிராம ஊராட்சிகள் சம்பளம் போட முடியாமல் திண்டாடி வருகின்றன. தேனி மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வருடமும் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மக்கள்தொகை அடிப்படையில் ஒதுக்கப்படும் நிதி (எஸ்எப்சி), கிராமங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றன. அதேநேரத்தில் மக்கள்தொகை குறைவாக உள்ள கிராம ஊராட்சிகள் வளர்ச்சியில் பின்னுக்கு செல்கின்றன. இதற்கு காரணம், சிறிய ஊராட்சிகளில் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக வரக்கூடிய நிதியும் உண்டு. இதில் சம்பளம், துப்புரவு பணி, ஓஹெச்டி ஆபரேட்டர் சம்பளம் என வழங்குவதில் பல பிரச்னைகள் எழுகின்றன. இதேபோல் ஒப்படைக்கப்பட்ட நிதி, ஸ்டாம்ப் டூட்டி என நிதி வரும்போது திண்டாட்டங்கள் குறைகின்றன. ஆனால், அதே நேரத்தில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் டி.சிந்தலைசேரி, டி.மீனாட்சிபுரம், தம்மிநாயக்கன்பட்டி, டி.ரெங்கநாதபுரம், கோகிலாபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் போதிய நிதி இல்லாமல் திண்டாடும் நிலை உள்ளது.