உத்தமபாளையம், அக்.15: உத்தமபாளையம், தேவாரம் பகுதிகளில் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பில் தடைசெய்யப்பட்ட கலப்பட பொருட்கள் கலப்பதாக புகார் எழுந்துள்ளது. உத்தமபாளையம், கம்பம், தேவாரம், கோம்பை உள்ளிட்ட ஊர்களில் உள்ள இனிப்பு (ஸ்வீட்) தயாரிப்பு நிலையங்களில் தீபாவளியை முன்னிட்டு இப்போதே ஸ்பெஷல் ஸ்வீட்டுகள் தயாரிப்பு பணி நடக்கிறது. இதற்காக ஸ்பெஷல் மாஸ்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இதற்கென சிறப்பு சம்பளங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் இரவு, பகலாக தயாரிப்பு பணிகள் நடக்கிறது. தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை ஏற்கனவே அனைத்து கார, இனிப்பு தயாரித்து விற்பனை செய்யும் கடைக்காரர்களை நேரில் வரவழைத்து கூட்டம் நடத்தி உள்ளது. இதில் பல விதிமுறைகளை வலியுறுத்தியுள்ளது. உணவுப்பொருள் தயாரிப்பில் சுகாதாரத்தை கடைபிடிக்கவேண்டும். எக்காரணத்தை கொண்டும் கலப்பட எண்ணெய், கலர் பொடிகள், சுவையூட்டும் பொருட்களை சேர்க்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.