சிவகங்கை, அக். 15: சிவகங்கை மாவட்டத்திற்கான பெரியாறு பாசன கால்வாய்கள் விரிசலடைந்தும், புதர் மண்டியும் பராமரிப்பின்றி உள்ளன. இதனால் பெரியாறு நீர் முழுமையாக கிடைக்குமா என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூர், சிவகங்கை, திருப்புவனம் தாலுகாவில் பெரியாறு பாசன நேரடி ஆயக்கட்டில் சுமார் 143 கண்மாய்கள் உள்ளது. இந்த கண்மாய்கள் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஒருபோக பாசன பகுதியாக உள்ளன. பெரியார் பாசன பகுதி மேலூர் பிரிவின் கீழ் உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக மேலூர் பிரிவில் ஒரு போக சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டும் சிவகங்கை மாவட்ட பகுதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இருபோக சாகுபடிக்கு பெரியாறு கால்வாயில் நீர் திறக்கப்பட்டு மதுரை மாவட்டத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்ேபாது இந்நிலையில் வைகை அணையில் இருந்து பெரியாறு பாசன பகுதிகளுக்கு ஒரு போக சாகுபடிக்கு அக்.9 முதல் நீர் திறக்கப்பட்டது. இந்த நீர் சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் நீர் திறக்கப்படும் நாட்களில் இதுபோல் அரசு அறிவிப்பு செய்தாலும், மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்திற்கு நீர் வழங்கப்படுவதில்லை.