சென்னை, அக். 15: நோயாளிக்கு ஏற்பட்ட கால் முறிவை மறைத்து, அவரது மரணத்துக்கு காரணமான டாக்டருக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது தாய் நாகம்மாளுக்கு கடந்த 2013ம் ஆண்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால், விஜயகுமார் தனது தாயாரை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அப்போது, அங்கு பணியில் இருந்த மருத்துவர் ஒருவர், நாகம்மாளை பரிசோதனைக்காக மருத்துவமனையின் 2ம் தளத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, நாகம்மாள் தடுமாறி கீழே விழுந்ததில், அவரது குதிகாலில் முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுபற்றி விஜயகுமாரிடம் மருத்துவர் தெரிவிக்கவில்லை. மேலும், கால் முறிவுக்கு சரியாக சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளனர். ஆனால், நாகம்மாள் வலியால் அலறி துடித்தார். இதுபற்றி விஜயகுமார், தனது தாயாரிடம் கேட்டபோது, தவறி விழுந்ததாக கூறினார். உடனே, மருத்துவரிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் கால் முறிவு ஏதுமில்லை. சரியாகிவிடும் என்று கூறி நாகம்மாளை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வந்த நாகம்மாள் பல மாதங்களாக நடக்க முடியாமல் படுக்கையிலையே இருந்துள்ளார்.