சேத்தியாத்தோப்பு, அக். 15: சேத்தியாத்தோப்பு அருகே நல்லதண்ணீர்குளம் கிராமத்தில் பழுதான மின் மோட்டாரை சரி செய்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீரேற்றி குடிநீர் வழங்கப்பட்டது. சேத்தியாத்தோப்பு அருகே மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எரும்பூர் ஊராட்சி நல்லதண்ணீர்குளம் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு நீரேற்றும் மின் மோட்டார் பழுதானது. இதனால் அப்பகுதி கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து கிராம மக்கள் விரைந்து வந்து மின் மோட்டாரை பழுது நீக்கி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க மேல்புவனகிரி வட்டார வளர்ச்சி அதிகாரி மோகன்ராஜியிடம் மனு அளித்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. அதன்படி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று மின் மோட்டாரை சரி செய்து மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீரை ஏற்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினர்.