குளச்சல், அக். 15: மணவாளக்குறிச்சி அருகே மாயமான பிளஸ் 1 மாணவன், சவுக்கு தோப்பில் சடலமாக கிடந்தார். அவரது உடல் தூக்கில் தொங்கி ெகாண்டு இருந்தது. மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை மாவிளை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சபின் (17). நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 10ம் தேதி காலை முதல் மாணவன் சபினை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐயப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவன் சபினை தேடி வந்தனர். ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியையொட்டி கடந்த 5ம் தேதி முதல் 8ம்தேதி வரை பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருந்தது. பின்னர் 9ம் தேதி சபின் பள்ளிக்கு செல்ல வில்லை. இதனால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். மறுநாள் (10ம்தேதி) முதல் அவர் மாயமானதால், பெற்றோர் கண்டித்ததால் வேறு எங்காவது சென்று இருப்பார்? என்ற ரீதியில் வெளியூர்களில் உள்ள உறவினர்களிடமும் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் முட்டம் தேரி பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் சிறுவன் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில், தூக்கில் தொங்கிக் கொண்டு இருப்பதை நேற்று முன்தினம் மாலையில் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் பார்த்தனர்.