மன்னார்குடி, அக்.15; ஆவின் ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படுவதை போல் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பணியாளர்களுக்கும் மாதம்தோறும் ரூ.4ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும், ஆவின் ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் இலவச பால் வழங்க வேண்டும். பணிஓய்வு பெற்றவர்களின் வாரிசுகளுக்கு சங்கங்களில் வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் அனைவருக்கும் வருடாந்திர பஞ்சப்படி உயர்வு வழங்கிட வேண்டும், ஓய்வூதியம் பெறுவோர் மறைவுக்கு பின் வழங்கப்படும் இழப்பீடு தொகையை ரூ 1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது.மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் துவங்கிய பேரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கு சங்கத்தின் தலைவர் சுகுமார் தலைமை வகித்தார்.