குடியிருப்பு பகுதியில் சுகாதாரக்கேடு குருணை மருந்தை தின்ற 13 ஆடுகள் பரிதாப பலி

ராஜபாளையம், அக். 10: ராஜபாளையத்தில் மேய்ச்சலுக்கு சென்ற 13 ஆடுகள் குருணை மருந்தை தின்று உயிரிழந்தது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். ராஜபாளையம் முடங்கியார் சாலை இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் கணேசன், மரியதாஸ். இவர்கள் தமிழக அரசின் இலவச ஆடுகளை வாங்கி வளர்த்து வருகின்றனர். இருவருக்கும் சொந்தமான ஆடுகள் நேற்று காலை மேய்ச்சலுக்கு சென்றன. இதில், 13 ஆடுகள் மாலையில் வீடு திரும்பியவுடன் துடிதுடித்து இறந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த ஆடுகளின் உரிமையாளர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மேய்ச்சலுக்கு சென்ற பகுதியில் பார்த்தபோது, அங்கு அரிசியில் குருணை மருந்தை கலந்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்பேரில், ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து, ஆடுகளுக்கு குருணை மருந்தை வைத்து கொன்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும், உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: