சூலூர், அக்.10: சூலூர் அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 3.4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வருவதாக முதலிபாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் கடந்த மாதம் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சூலூர் வட்டாட்சியருக்கு மாவட்ட கலெக்டர் ராசாமணி உத்தவிட்டிருந்தார். வட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.
அந்த இடத்தில் 61 பேர் வீடுகள் கட்டியுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2017ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது கோவையில் நடந்த விழாவில் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதாகவும் அதன் பேரில் வீடு கட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த பட்டாவுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராக மக்களிடம் வட்டாட்சியர் கேட்டுக்கொண்டார். ஆனால் தங்களது ஒரிஜினல் பட்டா அப்பகுதியை சேர்ந்தவர் வாங்கி வைத்துக் கொண்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இது குறித்து கருமத்தம்பட்டி வருவாய் ஆய்வாளர் வழியாக குரும்பபாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் அறிக்கை வாங்கப்பட்டு மாவட்ட கலெக்டருக்கு அந்த நிலம் மந்தைப் புறம்போக்கு என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.