கரூர், அக். 10: பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்து வரும் தாந்தோணிமலை டாஸ்மாக்கை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பிரதான திண்டுக்கல் செல்லும் சாலையோரம் இந்த கடை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.மேலும் கலெக்டர் அலுவலகம் முதல் அனைத்து அலுவலகங்களும் இந்த பகுதியில் தான் உள்ளன. எனவே, அனைத்து அதிகாரிகளும் இந்த சாலையின் வழியாகத்தான் வாகனங்களில் அலுவலகத்துக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், சாலையோரம் உள்ள இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் சிலர், சாலையோரம் நின்று குடித்து விட்டு, சாலையோரத்திலேயே போதையில் மயங்கி கிடப்பது, அவ்வப்போது சாலையின் மையத்தில் நின்று கொண்டு வாகனங்களை தடுத்து நிறுத்துவது, தகாத வார்த்தைகளை கூறுவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், டாஸ்மாக் கடையின் அருகிலேயே அரசுடைமையாக்கப்பட்ட வங்கியும் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களும் குடிமகன்களின் தொந்தரவால் அவதியுற்று வருகின்றனர்.