களக்காடு, அக். 10: களக்காட்டில் தசரா விழாவை முன்னிட்டு 12 சப்பரங்கள், ஒரே இடத்தில் காட்சி கொடுத்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம், களக்காட்டில் ஆண்டுதோறும் தசரா விழாவை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் இருந்து வரும் சப்பரங்கள் ஒரே இடத்தில் காட்சி கொடுக்கும் வைபவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு தசராவின் 10ம் நாளான நேற்று முன்தினம் விழா கோலாகலமாக நடந்தது. இரவு 8 மணிக்கு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்மன், வரதராஜ பெருமாள் முதல் காட்சி அளித்தனர்.
இரவு 9 மணி முதல் சப்பரங்கள் சத்தியவாகீஸ்வரர் கோயில் முன் வரத் துவங்கின. இரவு 11.30 மணிக்கு பாரதிபுரம் உச்சிமாகாளி அம்மன் கோயில், வடக்குமாடவீதி கற்பகவள்ளி அம்மன் கோயில், நாடார் புதுத்தெரு முப்பிடாதி அம்மன் கோயில், விஸ்வகர்மா தெரு ஸ்ரீசந்தனமாரியம்மன் கோயில், கழுகேற்றி முக்கு ஸ்ரீமுப்பிடாதி அம்மன் கோயில், தோப்புத்தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், கோவில்பத்து ஸ்ரீமுப்பிடாதி அம்மன் கோயில், கோவில்பத்து துர்கா பரமேஸ்வரி அம்மன் கப்பலோட்டிய தமிழன் தெரு ஸ்ரீமுப்பிடாதி அம்மன் கோயில், சிதம்பரபுரம் உச்சினிமாகாளி அம்மன் கோயில் ஆகிய 10 கோயில்களில் இருந்து வந்திருந்த 10 அம்மன் சப்பரங்களும் ஒரே இடத்தில் மேற்கு நோக்கி அணிவகுத்து நின்றன.