கடலூர், அக். 10: 2020 ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, கடலூர் மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளின் 2020ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்திடும் பணி கடந்த மாதம் 1ம் தேதி முதல் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் பணித்துள்ளது. இதன்படி கடந்த மாதம் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை வாக்காளர்கள் தாமாக முன்வந்து வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் தற்போது வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்களது மற்றும் குடும்ப உறுப்பினர்களது வாக்காளர் பட்டியலிலுள்ள விவரங்களை வாக்காளர் உதவி மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950, வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் இயங்கும் வாக்காளர் உதவி மையம் மற்றும் பொது சேவை மையங்கள் ஆகியவற்றின் மூலமாக சரிபார்த்து கொள்ளலாம்.