திருச்செந்தூர், அக்.4: மெஞ்ஞானபுரம் அருகே எழுவரைமுக்கி பஞ்சாயத்தைச் சேர்ந்தது தாய்விளை கிராமம். இந்த கிராம மக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க 5 கி.மீ. தொலைவில் உள்ள தோப்பூரூக்கு தான் செல்ல வேண்டும். கடந்த 2 மாதத்திற்கு முன்பு பகுதி நேர ரேஷன் கடை கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் ரேஷன்கடை அமைத்து தர ஒப்புதல் வழங்கினர். ஆனால் ரேஷன் கடை அமைக்காததை கண்டித்து தாய்விளை கிராமமக்கள் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். நேற்று 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்த மக்கள் திருச்செந்தூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்து ரேஷன் கார்டு, ஆதார் கார்டை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களிடம் ஆர்டிஓ தனப்பிரியா பேச்சுவார்த்தை நடத்தினார்.