கடலூர் அக். 2: கடலூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற முதல் தகவல் அளிப்பவருக்கான வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் ஆட்சியர் அன்புச்செல்வன் பேசியதாவது: இயற்கை பேரிடர் சீற்றம் ஏற்படுகிற மாவட்டமாக கடலூர் மாவட்டம் அறியப்படுகிறது.
முதல் தகவல் அளிப்பவர்கள் பேரிடர் காலங்களில் ஏற்படுகின்ற பாதிப்புகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் வெள்ளம் சூழக்கூடிய பகுதிகளாக 278 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில் பெண்களும், குழந்தைகளும் மிகவும் பாதிப்படைகின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வோடு அலுவலர்களை தொடர்புகொண்டு மற்றவர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். தீயணைப்புத்துறை, காவல்துறை, மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை (1077) எண்களை பயன்படுத்தி உங்களையும் பாதுகாத்துக்கொண்டு, மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.