திருச்சி, அக்.1: நாச்சிக்குறிச்சி இரட்டை வாய்க்கால் பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர், கட்சியினர் திருச்சி கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். திருச்சி வயலூர் ரோடு, நாச்சிக்குறிச்சி இரட்டை வாய்க்கால் பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பெண்கள், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். குடிமகன்களின் தொல்லை அதிகரிக்கும். எனவே இங்கு டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்றுமுன்தினம் மாலை அப்பகுதியில் வாசன்நகர் வாக்கர்ஸ் அசோசியேசன் சார்பில் அமைதிப் பேரணி நடந்தது.