களியக்காவிளை, அக்.1: களியக்காவிளையில் எப்போதும் நெரிசலாக காணப்படும் பஸ் ஸ்டாண்டை விரிவாக்கம் செய்யவேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் தமிழக அரசு 3.25 கோடி ரூபாயை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளுக்காக ஒதுக்கீடு செய்தது. இதற்கான திட்ட அறிக்கையை பேரூராட்சி நிர்வாகம் வடிவமைத்தது. இந்த அறிக்கை செயல்படுத்தப்படும்போது தற்ேபாது சந்தை வணிகம் நடைபெறும் பகுதிகள் பஸ் ஸ்டாண்டாக மாறும். இதனால் சந்தையில் வணிகத்தில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான வணிகர்கள் அதிருப்தியடைந்தனர்.இதையடுத்து தினசாி சந்தை வியாபாரிகள், மாவட்ட கலெக்டரிடம், தங்கள் நலனை பாதுகாக்குமாறு மனு அளித்தனர். இதன் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் மாவட்ட கலெக்டர் வணிகர் சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், பேரூராட்சிகளின் இயக்குனர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் தேசியநெடுஞ்சாலையில் தற்போது மேடாக காணப்படும் 23 சென்ட் இடத்தை வணிக வளாகத்திற்கு ஒதுக்குவது என்றும், அங்குள்ள மண் மேட்டை அகற்றி 2 மாடியில் கட்டிடம் கட்டி கீழ்த்தளத்தை மொத்த வியாபாரத்திற்கும், மேல் தளத்தை சில்லரை வியாபாரத்திற்கும் ஒதுக்குவது என்றும், இதற்காக ஒன்றரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளதாகவும் இதன் பணிகள் நிறைவடைந்த பின் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகள் தொடங்கும் என்றும் மாட்ட ஆட்சியர் தரப்பில் வியாபாரிகளுக்கு உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.