முத்துப்பேட்டை ,செப்.30: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 29ஊராட்சிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் பல்வேறு பணிகளுக்கு இங்கு வந்து செல்வது வழக்கம். இந்த வளாகத்தில் வட்டார வளர்ச்சி துறை மட்டும் அல்லாமல் அதை சார்ந்த பல்வேறு துறை அலுவலகமும் செயல்படுகிறது. வேளாண்மை துறை அலுவலகம் இதில் தான் இயங்கி வருகிறது. இந்நிலையில் இதன் கட்டிடங்களை அலுவலர்கள் முறையாக பராமரிக்கப்படாததால் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்கள் போல தூசி, ஒட்டை, அழுக்குகள் படிந்து சுத்தமாக பொலிவு இழந்து உள்ளது. மேலும் கட்டிடங்களும் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து பில்லர் மற்றும் சிலாப் கம்பிகள் வெளியில் தெரியும் நிலைமையில் உள்ளன. இதில் குறிப்பாக அலுவலகத்தின் நடுவில் உள்ள பழமையான கட்டிடம் கம்பீரமாக காட்சி அளித்தாலும் அதன் பல பகுதிகள் முறையாக பராமரிக்கப்படாததால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி கட்டிட உள்பகுதிக்கு சென்று அதன் கம்பிகள் பொலிவடைய செய்து முற்றிலும் சேதமாகியுள்ளன. இதில் முன்பகுதி கட்டிடத்தின் மாடிப்படிகள் கீழ்புறம் மற்றும் மேல்புறம் சிமென்ட் பூச்சுகள் விழுந்து எலும்பு கூடாக எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதுபோன்று பல்வேறு பகுதி தாங்கு பில்லர் தூண்களும் அதே நிலையில் உள்ளதால் எந்நேரத்திலும் இடிந்து விழுந்து அலுவலகத்திற்கு வந்து செல்லும் மக்களுக்கும் அதேபோல் அலுவலக ஊழியர்களுக்கும் பாதிப்புகள் அடைய வாய்ப்புகள் உள்ளன.