வேலூர், செப்.30: உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த வேலூர் மாவட்டத்திற்கு 1800 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பெங்களூருவில் இருந்து நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ெகாண்டு வரப்பட்டது.தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளை துரிதப்படுத்த கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை கர்நாடகா, பீகார் மாநிலங்களில் இருந்து கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வேலூர் மாவட்டத்திற்கு தேவையான 6 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த 27ம் தேதி கொண்டு வரப்பட்டு வேலூர் பிடிஓ அலுவலக குடோனில் வைக்கப்பட்டுள்ளது.